ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் இந்தியருமான ஸ்ரீவாஸ் சஹஸ்ரநாமத்துக்கு பிரிட்டனின் 2025-ஆம் ஆண்டுக்கான இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
உலக அளவில் பல்வேறு துறைகளில் 40 வயதுக்கும் குறைவான இளம் சாதனையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
லண்டனின் பால் மாலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்குநர்கள் நிறுவனத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான இந்த விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.16) நடைபெற்றது. இதில், கல்வித் துறையின் கீழ் ஸ்ரீவாஸ் சஹஸ்ரநாமத்துக்கு விருது வழங்கப்பட்டது. அத்துடன், அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த ஒட்டுமொத்த மக்கள் விருப்பத் தேர்வு விருதையும் ஸ்ரீவாஸ் சஹஸ்ரநாமம் வென்றார்.
இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல கண் மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் வி. சஹஸ்ரநாமத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி மாணவரான ஸ்ரீவாஸ் சஹஸ்ரநாமம், கோழிக்கோட்டில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பி.எச்டி. படிப்பை மேற்கொண்டார்.