“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!
இந்தியாவின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் பிகாரும் ஒன்றாக இருக்கும் என முதல்வர் நிதீஷ்குமார் பதிவிட்டுள்ளதைப் பற்றி...
இந்தியாவின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் பிகாரும் ஒன்றாக இருக்கும் என முதல்வர் நிதீஷ்குமார் பதிவிட்டுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தனது முந்தைய ஆட்சியின் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்த நிலையில், பிகார் மாநிலத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக நிதீஷ் குமார் நேற்று(நவ.19) தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி அரங்கில் இன்று (நவ.20) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்றார். ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 10 ஆவது முறையாக நிதீஷ் குமார் பொறுப்பேற்றார்.
அதைத்தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்ற பிறகு நிதீஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பிகாரின் முழுமையான வளர்ச்சிக்கான உறுதியுடன், மத்திய அரசின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும்.
பிகார் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நல்லாசியுடன், நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக மாநிலத்தை மாற்றுவோம் என்று நான் நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.