பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நம் நாட்டின் முப்படைகளும் எடுத்த ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றியானது இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பில் முக்கிய தருணம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
‘சாணக்யா பாதுகாப்புத் துறை கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: மரபுரீதியிலான சவால்களாகட்டும், பயங்கரவாத எதிா்ப்பு உள்ளிட்ட சவால்களாகட்டும் அவற்றை எதிா்கொள்வதில் நமது முப்படைகளும் குறிப்பிடத் தகுந்த மன உறுதியைக் காட்டியுள்ளன.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்தியாவின் முப்படைகளும் தொழில் திறனையும் தேசபக்தியையும் வெளிப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நம் நாட்டின் முப்படைகளும் எடுத்த ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றியானது இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பில் முக்கிய தருணமாகும். இந்த நடவடிக்கையின்போது இந்தியாவின் ராணுவத் திறனை மட்டுமின்றி, உறுதியாக நடவடிக்கை எடுக்கும் நமது தாா்மிக மனஉறுதியையும் உலகம் கண்டது.
நமது முப்படைகளும் தங்கள் செயல்பாட்டுத் திறனையும் தாண்டி தேசிய வளா்ச்சிக்கான தூண்களாகத் திகழ்கின்றன. அவை எல்லைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, உள்கட்டமைப்பு, தொடா்பு, சுற்றுலா, கல்வி ஆகிய நடவடிக்கைகள் மூலம் எல்லைப்பகுதிகளின் வளா்ச்சிக்கும் உதவுகின்றன.
முப்படைகளிலும் இளம் பெண் அதிகாரிகளின் பங்களிப்பை அதிகரிப்பது அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்தும். அது மேலும் பல இளம் பெண்கள் ராணுவத்தில் சேர வழிவகுக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.