கோழிக்கோடு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து!
கோழிக்கோடு குழந்தைகள் நல மருத்துவமனைக் கட்டடத்தின் 9வது தளத்தில் தீ விபத்து நேரிட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடுவில் அமைந்துள்ள குழந்தைகள் நல தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சனிக்கிழமை காலை தனியார் மருத்துவமனைக் கட்டடத்தின் 9வது தளத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் நல மருத்துவமனையின் சி பிளாக் பகுதியில் இன்று காலை 9.45 மணிக்கு தீ பரவியது. ஒன்பதாவது தளத்தில் குளிர்சாதன வசதிகள் நிறுவப்பட்டிருந்ததால், உயிர்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தீ விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்து கரும்புகை மேலெழும்பியது. கீழ் தளங்களுக்கும் புகை பரவியதால், நோயாளிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த தீ தடுப்பு அலாரம் ஒலித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோழிக்கோடு பேருந்து நிலையத்துக்கு அருகே இந்த மருத்துவமனை அமைந்திருந்ததால், அலாரம் ஒலித்தபோது அதனை சுற்றியுள்ள பகுதி மக்களும் அச்சமடைந்தனர்.
நோயாளிகள் தங்க வைக்கப்படாத இடத்தில் தீப்பற்றியிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் கட்டடத்தில் இருந்து நோயாளிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, அனைவரையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் இருந்த அனைவரும் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தீ விபத்து நடந்த இடத்தில் கட்டுமானப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும்தான் நடந்து வந்தது. அங்கு நோயாளிகள் யாரும் இருக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், முதலில், 9வது தளத்திலிருந்து புகை வந்தது. உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீவிரமாக போராடி 10.30 மணிக்கு தீயை கட்டுப்படுத்தினர். இதனால், 9வது தளத்தில் பற்றிய தீ மற்ற தளங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும் கீழ் தளங்களில் பரவிய புகையை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மின் கசிவுதான் இந்த தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.