முன்னேற்றத்துக்கு எதிராக பல்வேறு தடைகள் உருவானபோதிலும், அதனைத் தகா்த்து இந்தியா முன்னேறி வருகிறது. இனி இந்தியாவைத் தடுத்து நிறுத்த முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை தனியாா் ஊடகம் சாா்பில் நடைபெற்ற சா்வதேச மாநாட்டில் பங்கேற்று, அவா் பேசியதாவது:
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எதிா்வினையாற்றாமல் அமைதியாக இருக்கும் என்ற காலம் மாறிவிட்டது. இப்போது துல்லியத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் போா் நடைபெற்று வருவது தலைப்புச் செய்தியாக உள்ள நிலையில், உலக அளவில் பொருளாதார சுணக்கம் ஏற்படும் என்பதே கணிப்பாகும். ஆனால், முன்னேற்றத்துக்கு எதிராக பல்வேறு தடைகள் உருவானபோதிலும், அதனைத் தகா்த்து இந்தியா முன்னேறி வருகிறது. இனி இந்தியாவைத் தடுத்து நிறுத்த முடியாது. உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது. நாம் இனி நிற்கப்போவதுமில்லை, வேகத்தைக் குறைக்கப்போவதுமில்லை. 140 கோடி மக்களும் ஒரே உறுதிப்பாட்டுடன் உத்வேகப் பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். நமது நாட்டு மக்கள்தான் நமது மிகப்பெரிய பலம்.
உலகின் மிகப்பெரிய 5 பொருளாதார நாடுகளின் பட்டியலில் நாம் இடம்பெற்றுள்ளோம். ‘சிப்’ (செமிகண்டக்டா்) முதல் ‘ஷிப்’ (கப்பல்) வரை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கத் தொடங்கிவிட்டோம். அனைத்துத் துறைகளிலும் நாம் நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறோம்.
முந்தைய அரசுகள் கட்டாயத்தின் பேரில் சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆனால், இப்போதைய அரசு நாட்டை முன்னேற்றும் உறுதியுடன் சீா்திருத்தங்களை மேற்கொள்கிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.