தீ விபத்தில் மூச்சுத் திணறி காங்கிரஸ் நிர்வாகி பலி!
இந்தூரில் தீ விபத்தில் சிக்கி காங்கிரஸ் நிர்வாகி பலியானது குறித்து...
மத்தியப் பிரதேசத்தில், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காங்கிரஸ் நிர்வாகி ப்ரவேஷ் அகர்வால் பலியாகியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ப்ரவேஷ் அகர்வால் (வயது 40). இவர், மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார்.
இந்தூரில் ப்ரவேஷ் அகர்வாலுக்குச் சொந்தமாக ஒரு கார் ஷோரூம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் நெருங்கிய நண்பராவார்.
இந்த நிலையில், பர்வேஷ், அவரது மனைவி ஷ்வேதா மற்றும் இரண்டு மகள்கள் இன்று (அக். 23) அதிகாலை அவர்களின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, காலை 5 மணியளவில் அவர்களது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் மூலம் ஷ்வேதா அவர்களது மகள்கள் சௌமியா (12) மற்றும் மாய்ரா (10) ஆகியோர் மீட்கப்பட்டனர்.
ஆனால், சௌமியாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீயினால் வீட்டினுள் ஏற்பட்ட புகையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய ப்ரவேஷை, மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ப்ரவேஷின் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் மூலம் தீ அருகில் இருந்த அறையினுள் பரவிய தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ப்ரவேஷ் அகர்வாலின் மறைவுக்கு, முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான நகுல் கமல்நாத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: முதல்வர் முகம் தேஜஸ்வி, இந்தியா கூட்டணி தோல்வி உறுதி - பாஜக