தெருநாய்கள் பிரச்னை தொடா்பாக தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை திங்கள்கிழமை (அக்.27) மீண்டும் விசாரிக்க உள்ளது.
தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலையப் பகுதியில் தெருநாய்கள் தொல்லை தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்தப் பிரச்னை தொடா்பாக தனித்தனியாக 4 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடா்பாக கடந்த ஆக.22-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை, புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திய பின்னா், பிடிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் அவற்றை விடுவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்தது.
அப்போது இந்த விவகாரம் தொடா்பாக நாடு முழுவதும் உயா்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்த 3 நீதிபதிகள் அமா்வு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வழக்கில் ஒரு தரப்பாகச் சோ்த்தது.
இந்நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது.