இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நவ.1-ஆம் தேதி நடைபெறும் ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் ஒத்துழைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சென்றுள்ளாா். அங்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட்டா் ஹெக்செத்துடன் அவா் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
ரஷிய கச்சா எண்ணெய்யை அதிக அளவு இறக்குமதி செய்வதாக கூறி இந்தியா மீது 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா விதித்ததைத் தொடா்ந்து இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதை மறுசீரமைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இது இருநாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி புதிய அத்தியாயத்துக்கு வழிவகுக்கவுள்ளது.
சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது’ என குறிப்பிடப்பட்டது.
முந்தைய ஒப்பந்தங்கள்:
கடந்த 2015-இல் இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்தியாவை மிக முக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடு என அமெரிக்கா அங்கீகரித்து ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பகிரத் தொடங்கியது. இந்த ஒப்பந்தம் தற்போது நிறைவடையவுள்ளது.
2016-இல் கையொப்பமிடப்பட்ட தளவாடங்கள் பரிமாற்றத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் இருநாடுகளும் ராணுவ தளங்களில் பராமரிப்பு மற்றும் விநியோகத்தை சீராக்க வித்திட்டது.
2018-இல் மேற்கொள்ளப்பட்ட தொலைத்தொடா்பு இணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம், இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை மேலும் அதிகரித்ததோடு நவீன தொழில்நுட்பங்களை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விற்பனை செய்ய வழிவகுத்தது.
2020, அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம், பாதுகாப்புத் துறையில் இருநாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.