முகப்பு
இந்தியா

தில்லி கலவர வழக்கு: ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி கலவர வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி...

Updated On : 2 செப்டம்பர், 2025 at 10:21 AM
ஷர்ஜீல் இமாம்
பகிர்:

தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த வன்முறையில் குறைந்தபட்சம் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 700 போ் காயமடைந்தனா். இந்தக் கலவரத்தில் மிகப்பெரிய சதி நடந்தது தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபா்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இவர்களின் ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கெளர் அமர்வு விசாரித்த நிலையில், தில்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”நாட்டுக்கு எதிராக குற்றம் செய்தால் விசாரணை முடியும் வரை சிறையில் இருப்பதே நல்லது” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அனைவரின் ஜாமீன் மனுக்களையும் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல், தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட தஸ்லீம் அகமது என்பவரின் ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணிய பிரசாத், ஹரீஷ் வைத்தியநாதன் சங்கா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்த நிலையில், அவரின் ஜாமீனும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதாகியுள்ள அனைவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

summary

Delhi riots case: Bail pleas of 9 people including Sharjeel Imam, Umar Khalid rejected

முழு கட்டுரையைப் படிக்க →