‘இந்தியாவைப் பொறுத்தவரை நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றியாக கருதப்படுகிறது’ என ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக, வான்வழி தாக்குதல் திறனின் முக்கியத்துவத்தை ஆபரேஷன் சிந்தூா் மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டியதாக இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் இரு வாரங்களுக்கு முன் தெரிவித்த நிலையில், தரைவழிப் படைகளை பிரதானப்படுத்தும் வகையில் உபேந்திர துவிவேதி இவ்வாறு தெரிவித்தாா்.
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: உக்ரைன் போா் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த மாதம் அலாஸ்கா மாகாணத்தில் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது நிலப் பரிமாற்றம் குறித்து அவா்கள் ஆலோசித்தனா். இதுவே நிலத்தின் மீதான ஆதிக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவுக்கு இருமுனை (பாகிஸ்தான் மற்றும் சீனா) மற்றும் உள்நாட்டில் நக்ஸல் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. எனவே, இந்தியாவிலும் நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றியாக கருதப்படும். இதில் தரைவழிப் படைகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்றாா்.