சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறை!
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கையே சிறந்த வழி என உச்சநீதிமன்றம் கருத்து.
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவதைத் தடுக்கும் வகையில், மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை சில நேரங்களில் காவலர்கள் அணைத்து வைப்பது அல்லது செயல்படாமல்போவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கையே சிறந்த வழி எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 7 - 8 மாதங்களில் மட்டும் 11 காவல் நிலைய மரணங்கள் பதிவாகியுள்ளன. காவல் நிலைய மரணங்களில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துவிட்டதாகவும், அல்லது வேறு திசையில் சிசிடிவி இருந்ததாகவும் காரணம் கூறி உரிய விடியோ காட்சிகளை காவல் துறை தரப்பில் இருந்து நீதிமன்றத்திற்கு வழங்குவதில்லை என்றும் காரணங்கள் கூறப்படுவதாக செய்திகள் வெளியாகின.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவது குறித்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று (செப். 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் காவல் துறையின் காரணங்களைத் தவிர்க்க, மனித தலையீடுகளற்ற முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையே சிறந்தது எனத் தோன்றுகிறது. இதனால், அனைத்து காட்சிகளும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும். இந்த வழியில் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இதற்கு மாற்று வழி இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய நீதிபதி சந்தீப் மேத்தா, அனைத்து சிசிடிவியில் பதிவாகும் காட்சிகளையும் குறிப்பிட்ட இடத்தில் கண்காணிக்கும் வகையிலான சாதனத்தை அல்லது இயந்திரத்தை உருவாக்க ஐஐடியிலுள்ள வல்லுநர்களை ஈடுபடுத்தலாம். சிசிடிவியில் பதிவான காட்சிகளை கண்காணிப்பதும் மனித தலையீடுகளற்ற தானியங்கியாக இருக்க வேண்டும் என நீதிபதி சந்தீப் மேத்தா குறிப்பிட்டு வழக்கை செப். 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டியது கட்டாயம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இதேபோன்று மத்திய அரசின் கீழ் செயல்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை (இடி), போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (என்சிபி), வருவாய்த் துறை (ஐடி) போன்ற விசாரணை அமைப்புகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு!
Supreme Court mooting fully automated control rooms to detect non-functional CCTVs in police stations
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.