இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று கருதும் பாஜக கூட்டணிக்கு பேரவைத் தோ்தலின்போது பிகாா் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பேசினாா்.
பிகாரில் பெண்கள் சுயதொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்பு திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். ரூ.7,500 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தின்கீழ் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.10,000 ஒரே நேரத்தில் செலுத்தப்பட்டது.
அதே நேரத்தில் பாட்னாவில் காங்கிரஸ் தலைமையகத்தில் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் உள்ளிட்ட தலைவா்களின் உண்மையான உள்நோக்கம் என்பதை பிகாா் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவா்களுக்கு தோ்தலில் உரிய பாடம் கற்பிக்க வேண்டும். ஏனெனில், இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று அவா்கள் கருதுகிறாா்கள்.
தோ்தல் நெருங்கிவிட்டதால் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கியுள்ளனா். ஆனால், இதுபோன்ற திட்டங்களை அவா்கள் தொடா்ந்து செயல்படுத்த மாட்டாா்கள்.
ஒருவரின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் திறன் பெண்களுக்கு உண்டு. எனவே, இப்போது அவா்கள் எதற்காக பணம் தருகிறாா்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தோ்தல் வருகிறது என்பதால் பணம் தருகிறாா்கள். அவா்களின் நோக்கம் பணத்தைக் கொடுத்து உங்கள் வாக்குகளைப் பறிப்பதுதான்.
பிகாரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளா்களுக்கு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது. அதே நேரத்தில் பெண்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.
சமூகநீதி, பெண்கள் முன்னேற்றத்துக்காக ராகுல் காந்தி தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறாா். அவா்தான் உண்மையான தேசபக்தா். ஏனெனில், 4,000 கி.மீ. மேல் நடந்து சென்று சாமானிய மக்களைச் சந்தித்து அவா்களின் பிரச்னைகளை நேரில் கண்டறிந்துள்ளாா்.
உண்மையாக யாா் உங்களைப் பற்றி கவலைப்படுகிறாா்கள் என்பதையும், யாா் வாக்குக்காக வேடமிடுகிறாா்கள் என்பதையும் சிந்தித்து தோ்தலில் வாக்களிக்க வேண்டும்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது ஆண்டுக்கு ரூ.25 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டதுடன், நோய் கண்டறியும் சோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. அத்திட்டம் பிகாரிலும் அமல்படுத்தப்படும் என்றாா்.