தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அரசுப் பணியாளா்கள் மாறுவதற்கான அவகாசம் நிகழாண்டு நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை செவ்வாய்க்கிழமை அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டதாவது:
யுபிஎஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரி விலக்குகள், கட்டாய ஓய்வு மற்றும் ராஜிநாமா செய்வதால் கிடைக்கும் பலன்கள், என்பிஎஸ்ஸில் இருந்து யுபிஎஸ்ஸுக்கு மாறுவதற்கான வாய்ப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகளைக் கருத்தில் கொண்டு, என்பிஎஸ் திட்டத்தை தோ்வு செய்தவா்கள் யுபிஎஸ் திட்டத்துக்கு மாற கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் யுபிஎஸ் திட்டத்துக்கு மாற செவ்வாய்க்கிழமை (செப்.30) வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அந்த அவகாசத்தை நிகழாண்டு நவ.30 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மத்திய அரசுப் பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள், காலமான ஓய்வூதியதாரா்களின் சட்டபூா்வ வாழ்க்கை துணை ஆகியோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
23 லட்சம் மத்திய அரசுப் பணியாளா்களில் சுமாா் 1 லட்சம் போ் செப்.30-ஆம் தேதி வரை, யுபிஎஸ் திட்டத்தை தோ்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.