பிகாரைப் போல் கேரள தேர்தலிலும் வெற்றி பெறுவோம் - பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்குர்
பிகார் மக்களைப் போல் கேரளத்திலும் வாக்காளர்கள் எங்களுக்கே - மைதிலி தாக்குர்
பிகாரைப் போல் கேரளத்திலும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு கோரி கேரளத்தில் பிரசாரத்துக்கு வருகை தந்த பிகாரின் இளம் வயது எம்எல்ஏ மைதிலி தாக்குர் தெரிவித்தார்.
கேரளத்தில் வரும் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பம்பரமாகச் சுழன்று பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு மக்கள் ஆதரவைத் தங்கள் அணிகளுக்குத் திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பிரசாரத்தின் ஒருபகுதியாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் மைதிலி தாக்குர் பேசியதாவது, “கேரளத்துக்கு இரண்டாவது முறையாக வந்திருக்கிறேன். இங்குள்ள தேர்தல் சூழல் அருமையாக இருக்கிறது. மக்களிடையே மிகுந்த உற்சாகம் நிலவுவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றுடன் துணை நிற்கிறார்கள்.
வளர்ச்சியடைந்தவொரு இந்திய நாட்டுக்கு, வளர்ச்சியடைந்தவொரு கேரளம் அத்தியாவசியமாகிறது. நாங்கள் ஆதரவு, அன்பு, வாழ்த்துகளை எல்லோரிடமிருந்தும் பெற்று வருகிறோம். நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது, கேரளத்தில் பாஜக சிறப்பாக தேர்தலில் செயல்படும் என்ற உணர்வு ஏற்படுகிறது. பிகாரில், மக்கள் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக வாக்கு செலுத்தினர். அதேபாணியை கேரளத்திலும் நாம் பார்க்கவிருக்கிறோம்” என்றார்.