கேரளத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? கருத்துக் கணிப்பு முடிவு!
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றி...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை மனோரமா நியூஸ் - சி வோட்டர் இணைந்து புதன்கிழமை வெளியிட்டுள்ளன.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றன. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சம பலத்துடன் இருக்கின்றன.
இந்த நிலையில், மனோரமா நியூஸ் - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, கேரளத்தில் மொத்தமுள்ள 130 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணி 69 - 81 தொகுதிகளைக் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 57 - 69 தொகுதிகளிலும், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 - 5 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பு, கடந்த டிசம்பர் 1, 2025 முதல் மார்ச் 26, 2026 வரை மாநிலம் முழுவதும் 89,693 பேரிடம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி வலுவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சபரிமலை கோயில் இருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் இந்த முறை காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் பாஜகவுக்கு 3 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.