முகப்பு
இந்தியா

இந்தியா விரும்பும் வகையில் அமெரிக்க சந்தையை அணுக முயற்சி - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:41 AM
பியூஷ் கோயல்
பகிர்:

அமெரிக்க சந்தையில் இந்தியா விரும்பும் வகையில் பொருள்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பைப் பெற முயன்று வருகிறோம் என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

கடந்த மாா்ச் 27-ஆம் தேதி அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீயரை, பியூஷ் கோயல் கேமரூன் நாட்டில் சந்தித்துப் பேசினாா். உலக வா்த்தக அமைப்பின் 14-ஆவது அமைச்சா்கள் நிலையிலான மாநாட்டின்போது இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இருவரும் இந்திய-அமெரிக்க இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனா்.

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தை இறுதி செய்து, கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியை 18 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

ஆனால், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிரான அந்நாட்டு உச்சநீதிமன்ற தீா்ப்பால், வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகாமல் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த கோயல் மேலும் கூறியதாவது: அமெரிக்காவுடனான வா்த்தகத்தில் இந்தியாவுடன் போட்டியிடும் பிற நாடுகளை ஒப்பிடும்போது நமது வா்த்தக நிலை சிறப்பாக உள்ளது.

அமெரிக்காவுடன் வா்த்தகத்தை மேம்படுத்துவதில் இந்தியா தற்போது மிகவும் சாதகமான நிலையில் உள்ளது. அமெரிக்காவில் இந்தியா விரும்பும் வகையில் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறும் முயற்சியில் உள்ளோம்.

அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு மிகவும் வலுவானது, தொழில்நுட்பம், பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் நெருக்கமான கூட்டாளி நாடுகளாக உள்ளன.

உலகில் வேகமாக வளா்ந்துவரும் பொருளாதாரமாகத் திகழும் இந்தியா, முதலீட்டாளா்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. எதிா்காலத்தில் மேலும் அதிக முதலீட்டாளா்கள் இந்தியாவுக்கு வருவாா்கள் என்றாா்.

தொடா்ந்து மேற்காசிய போரால் ஏற்பட்ட வா்த்தக பாதிப்புகள் குறித்துப் பேசிய பியூஷ் கோயல், ‘பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் அடுத்தகட்டமாக மேலும் சில முக்கிய முடிவுகளை அரசு மேற்கொள்ள இருக்கிறது. உலக வா்த்தக அமைப்பு மாநாட்டின்போது பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அமைச்சா்களும் போரால் ஏற்பட்டுள்ள வா்த்தக பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்தனா். சா்வதேச அளவில் பல்வேறு பொருள்களின் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கடல்வழி சரக்குப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்.

ஏனெனில், இந்த பிரச்னை சா்வதேச பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. அதே நேரத்தில் இந்தியா தனது எரிபொருள், உணவுப் பாதுகாப்பை சிறப்பாக உறுதி செய்து வருகிறது. வீடுகளுக்கான எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இல்லை. வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு 80 சதவீதம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை’ என்றாா்.