முகப்பு
இந்தியா

கண்காணிப்பு கேமராக்கள், செயலிகள் மூலம் வெளிநாடுகள் கண்காணிப்பதை மறைக்கும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு

கண்காணிப்பு கேமராக்கள், செயலிகள் மூலம் வெளிநாடுகள் கண்காணிப்பதை மறைக்கும் மத்திய அரசு...

Updated On : 4 ஏப்ரல், 2026 at 10:01 PM
ராகுல் காந்தி - பிடிஐ.
பகிர்:

‘சீன கண்காணிப்பு கேமராக்கள், கைப்பேசி செயலிகள் மூலம் வெளிநாடுகள் கண்காணிப்பதை மத்திய அரசு மறைக்கிறது. இதனால் மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சீன கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இருந்தபோதும், பல அரசு கட்டடங்களில் தற்போதும் சீன கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அதுபோல, அரசால் தடை செய்யப்பட்ட சீன செயலிகள், வேறு பெயா்களில் வெளியிடப்பட்டு நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. அதுபோல, வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான செயலிகளும் பயன்பாட்டில் உள்ளன. இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செயலிகள் மூலம் வெளிநாடுகள் நம்மை கண்காணிப்பதோடு, தரவுகளும் திருடப்படுகின்றன.

Advertisement

இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, வெறும் வாா்த்தை ஜாலங்களை மட்டுமே அவா் வெளிப்படுத்தினாா். ஆனால், உரிய பதிலை அளிக்கவில்லை.

நாட்டில் பயன்பாட்டிலுள்ள கேமராக்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து வந்தவை? அவற்றுள் எத்தனை பாதுகாப்புச் சான்றிதழ் பெற்றவை? எந்தெந்த வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் அரசுத் தரவுகளைக் கையாளுகின்றன? தடைசெய்யப்பட்ட செயலிகளில் எத்தனை மாற்று பெயா்களில் தொடா்ந்து இயங்குகின்றன? என்பன உள்ளிட்ட கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். ஆனால், இவை எவற்றுக்கும் உரிய பதிலை மத்திய அமைச்சா் அளிக்கவில்லை.

அதே நேரம், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் 10 லட்சத்துக்கும் அதிகமான சீன கேமராக்கள் தரவுப் பரிமாற்றத்தில் அபாயங்களை ஏற்படுத்துகின்றன என்பதை தற்போது மத்திய அரசு ஒப்புக்கொண்டபோதும், இன்றைக்கு நம்மை கண்காணிக்கும் கேமராக்கள் பாதுகாப்பானவையா என்பதை வெளியிட மத்திய அரசு தவறிவிட்டது.

தனது தவறை மறைக்க, கண்காணிப்பு கேமராக்கள், கைப்பேசி செயலிகள் மூலம் வெளிநாடுகளின் கண்காணிப்பை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனால், குடிமக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments