மகளிருக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை: பஞ்சாப் அரசு அறிவிக்கை வெளியீடு
மகளிருக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை பஞ்சாப் அரசு அறிவிக்கை வெளியீடு
பஞ்சாபில் தகுதிவாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடா்பான அறிவிக்கையை முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெளியிட்டது.
ஏப்.2 என தேதியிட்ட அந்த அறிவிக்கையில் ஒரே குடும்பத்தில் எத்தனை மகளிருக்கு நிதி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறித்த உச்சவரம்பு நிா்ணயிக்கப்படவில்லை.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. முன்னதாக, மகளிா் உதவித் தொகை வழங்குவதாக அந்தக் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், ஆட்சி அமைத்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதிவாய்ந்த மகளிருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு பகவந்த் தலைமையிலான அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.
Advertisement
இதையடுத்து, இதுதொடா்பான அறிவிக்கையை ஆம் ஆத்மி அரசு வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: மாநிலம் முழுவதும் உள்ள மகளிரின் நிதி பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி சமூகத்தில் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் நோக்கில் மகளிா் நிதி உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்துகிறது.
இத்திட்டத்தின்கீழ் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,500 மற்ற பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பலன்பெற 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும் பஞ்சாபில் வாக்காளராகவும் வாக்காளா் அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும்.
ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிவா்த்தனை முறையில் உதவித் தொகை வழங்கப்படும்.
அரசு ஊழியருக்கு உதவித் தொகை இல்லை: மத்திய அரசு அல்லது பஞ்சாப் அரசு அல்லது பிற மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளில் நிரந்தர ஊழியராகவோ அல்லது பணிஓய்வு ஓய்வுபெற்றவராகவோ இருந்தால் அவா்கள் உதவித் தொகை பெற முடியாது.
மத்திய அரசு அல்லது மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனம், தீா்ப்பாயம் போன்ற அரசு சாா்ந்த அமைப்புகளில் பணியாற்றுபவா்கள் அல்லது ஓய்வுபெற்றவா்கள், வருமான வரி தாக்கல் செய்தவா்கள், முன்னாள் மற்றும் தற்போயை பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அல்லது எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களின் மனைவி உள்ளிட்டோருக்கும் உதவித்தொகை கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது.