கார்கே மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!
கார்கே பேச்சால் ஹிந்துக்களுக்கு அவமரியாதை - பாஜக புகார்!
குவாஹாட்டி : அஸ்ஸாமில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மீது அம்மாநில பாஜக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடமும் அஸ்ஸாம் காவல் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது.
இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று(ஏப். 7) மாலை முடிந்தது. ஏப். 9-இல் அம்மாநிலத்தில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், அஸ்ஸாமில் ஸ்ரீபூமி மாவட்டம், நீலம்பஸார் பகுதியில் திங்கள்கிழமை(ஏப். 6) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கார்கே வெளிப்படுத்திய கருத்துகள், குறிப்பிட்ட பிரிவை கடுமையாகத் தாக்குவதாகவும் பொறுப்புணர்ச்சி இல்லாத பேச்சாக அமைந்திருந்ததாகவும் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கும் பண்பாட்டுக்கும் அவமரியாதையாக அமைந்திருப்பதாகவும் இத்தகைய கருத்துகள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி சமூக ஒற்றுமைக்கு ஆபத்தானதும்கூட என்று அஸ்ஸாம் பிரதேச பாஜக தெரிவித்துள்ளது.
Advertisement
இதையடுத்து, கார்கே மீது நடவடிக்கை கோரி அஸ்ஸாம் பாஜக பசிஸ்தா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறது. மேற்கண்ட விவகாரத்தில் அஸ்ஸாம் மாநில தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் பிரசாரத்தில் சமூகத்தில் பிரிவினையை தூண்டும் கருத்துகளைப் பேசியதற்காக கார்கே மீது சட்டரீதியாக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.