மோடி தீவிரவாதியா? கார்கே விமர்சனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!
கார்கே விமர்சனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது பற்றி...
பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் பாஜக மூத்த தலைவர்கள் புதன்கிழமை புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சென்னையில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த கார்கே, மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ”பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி. அவருக்குப் பெண் விடுதலை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றில் விருப்பம் கிடையாது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகிய விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை பாஜக அச்சுறுத்துகிறது. அதன் அடிப்படையில்தான் பிரதமர் மோடியை ஒரு தீவிரவாதி என்று கூறுகிறேன். நான் தனிப்பட்ட முறையில் மோடியை விமர்சிக்கவில்லை” என்றார்.
Advertisement
பிரதமர் மோடியைத் தீவிரவாதி எனக் குறிப்பிட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்த நிலையில், பாஜகவின் உயர்நிலைக் குழுவினர் தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்று இன்று புகார் அளித்துள்ளனர்.
இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரும் அடங்குவர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
”தேர்தல் ஆணையத்திடம் பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்திய இழிவான சொற்பிரயோகம் குறித்து நாங்கள் எடுத்துரைத்தோம். இது ஒரு தேசப் பிரச்னை. பிரதமரை தீவிரவாதி என்றழைப்பது குற்றமாகும்.
எந்தவொரு அரசியல் கட்சிகளும் பிரதமருக்கு எதிராக இத்தகைய அவதூறான சொற்பிரயோகத்தை பயன்படுத்தியதே இல்லை. இது ஜனநாயகத்துக்கு எதிராக இழிவான செயல். ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகவும் அமைகிறது. இது தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவித்தார்.