இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!
இரு தலைவர்களும் தில்லியில் பேச்சுவார்த்தை...
இந்திய-வங்கதேச உறவை வியூக ரீதியில் மறுசீரமைப்பது தொடா்பாக, தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் கலிலூா் ரஹ்மான் ஆகியோா் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனா். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான 18 மாத கால இடைக்கால ஆட்சியில் இருதரப்பு உறவுகள் கடும் பின்னடைவைச் சந்தித்தன. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவா் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பொறுப்பேற்றாா்.
வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்றப் பிறகு முதல் முறையாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் கலிலூா் ரஹ்மான், வெளியுறவு விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகா் ஹுமாயுன் கபீா் ஆகியோா் இந்தியாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தனா். தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை புதன்கிழமை சந்தித்த கலிலூா் ரஹ்மான், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டாா்.
இது தொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பல்வேறு பரிமாணங்களில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன’ என்று குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
வங்கதேச புதிய அரசுடன் தொடா்ந்து ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடும் இந்தியாவின் விருப்பத்தையும் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்ததாக, அவரது அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024, ஆகஸ்டில் மாணவா் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவரை விரைந்து நாடுகடத்த வேண்டும் என்று இந்தியத் தரப்பிடம் வங்கதேசம் மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரியையும் கலிலூா் ரஹ்மான் சந்தித்துப் பேசினாா்.