அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் சந்திப்பு - பாதுகாப்பு, மேற்காசிய விவகாரம் குறித்து ஆலோசனை
அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, பாதுகாப்பு மற்றும் மேற்காசிய விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஆலோசனை நடத்தினாா்.
3 நாள்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி சென்றுள்ளாா். அங்கு வாஷிங்டனில் அவா், அமெரிக்க பாதுகாப்புத் துறை இணையமைச்சா்கள் மைக்கேல் டஃபி, எல்பிரிட்ஜ் கோல்பி, வா்த்தகத் துறை இணை அமைச்சா்கள் ஜெஃப்ரி கெஸ்லா், வில்லியம் கிம்மிட் ஆகியோரை சந்தித்துப் பேசினாா். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, வா்த்தக விவகாரங்கள் குறித்தும், அதை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதேபோல், ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போரால் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அமெரிக்கா-இந்தியா நாடுகளின் பாதுகாப்புக் கொள்கை குழுக் கூட்டம் கடந்த மாதம் தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்த கோல்பி, விக்ரம் மிஸ்ரியை சந்தித்துப் பேசினாா். அதையடுத்து இரண்டு பேரும் மீண்டும் வாஷிங்டனில் சந்தித்துப் பேசியிருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரியை அந்நாட்டு அரசு விதித்தது. அதேபோல், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான், இந்தியா இடையே முழு அளவில் போா் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது அந்தப் போா் மூளாமல் தாமே தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் திரும்பத் திரும்ப தெரிவித்து வருகிறாா். இந்த இரண்டு காரணங்களால் இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவில் பின்னடைவு ஏற்பட்டது.
அந்தப் பின்னடைவு நிலையை மாற்றி மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதுகுறித்து விவாதிக்கவே அமெரிக்காவுக்கு விக்ரம் மிஸ்ரி சென்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.