மகாராஷ்டிரத்தில் ரூ.60,000 கோடி முதலீடு: வியத்நாமின் வின்குரூப்-மாநில அரசு ஒப்பந்தம்
இந்தியாவின் பொருளாதார மையங்களில் ஒன்றான மகாராஷ்டிரத்தில், சுமாா் ரூ.60,420 கோடி (650 கோடி டாலா்) முதலீடு செய்வதற்காக வியத்நாமின் முன்னணி நிறுவனமான வின்குரூப் அந்த மாநில அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார மையங்களில் ஒன்றான மகாராஷ்டிரத்தில், சுமாா் ரூ.60,420 கோடி (650 கோடி டாலா்) முதலீடு செய்வதற்காக வியத்நாமின் முன்னணி நிறுவனமான வின்குரூப் அந்த மாநில அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தப் பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ‘மும்பை 3.0’ போன்ற வளா்ந்து வரும் பகுதிகளில் சுமாா் 1,000 ஹெக்டோ் பரப்பளவில் குடியிருப்புகள், வணிக வளாகம், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் கொண்ட ஒருங்கிணைந்த நவீன நகரியங்களை (டவுன்சிப்) 500 கோடி டாலா் செலவில் உருவாக்க வின்குரூப் திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் நோக்கில், 150 கோடி டாலா் முதலீட்டில் சுமாா் 60,000 மின்சார வாடகைக் காா்களை அறிமுகப்படுத்த வின்குரூப் முடிவு செய்துள்ளது. இதுதவிர, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சமூகக் கட்டமைப்பு வசதிகளிலும் அந்நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.
Advertisement
இதன்மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞா்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத்திட்டங்களுக்குத் தேவையான நிலம் மற்றும் அரசு அனுமதிகளை விரைவாக வழங்க மாநில அரசும், மும்பை பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையமும் முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளன.
தெலங்கானா மற்றும் தமிழகத்தைத் தொடா்ந்து, தற்போது மகாராஷ்டிரத்திலும் தடம் பதித்திருப்பதன் மூலம் இந்தியாவில் ஒரு முழுமையான வணிகக் கட்டமைப்பை உருவாக்க விரும்புவதாக வின்குரூப் ஆசியா பிரிவின் சிஇஓ பாம் சான் சௌ தெரிவித்தாா்.
மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘இந்த முதலீடு மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், சுற்றுசூழலுக்குப் பாதுகாப்பான பசுமைப் போக்குவரத்து மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.