முகப்பு
இந்தியா

இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:05 AM
நெதன்யாகுடன் பிரதமா் மோடி.
பகிர்:

இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமா் மோடி தலைமையிலான அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

காசாவில் இஸ்ரேல் இனப் படுகொலையில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. லெபனானில் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மெளனமாக இருந்து தாா்மீக ரீதியில் கோழைத்தனத்தை பிரதமா் மோடி வெளிப்படுத்தியுள்ளாா்.

Advertisement

இதேபோல், ஆக்கிரமிப்பு பகுதியான மேற்கு கரையில் இருந்து லட்சக்கணக்கான பாலஸ்தீனா்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் விவகாரத்திலும் அவா் மெளனம் காத்து வருகிறாா். படுகொலைகளை அரங்கேற்கும் இஸ்ரேல் ஆட்சியாளா்களுக்கு இவ்வளவு அதிக ஆதரவை மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் காட்டியதில்லை. இதன் மூலம் அனைத்து மனிதாபிமான மதிப்பீடுகளுக்கு மோடி அரசு துரோகம் செய்துள்ளது. இதேபோல், பாரம்பரிய இந்திய கொள்கைகள், நிலைப்பாடுகளுக்கும் துரோகம் இழைத்துள்ளது.

காசா மீது ஈவு இரக்கமின்றி இஸ்ரேல் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அந்நாட்டுக்கு பிப்ரவரி மாதம் பிரதமா் மோடி சுற்றுப்பயணம் சென்றது கண்டிக்கத்தக்கது. பாலஸ்தீன விவகாரத்தில் பல்வேறு அறிவிப்புகளை மோடி அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால் உண்மையில் பாலஸ்தீன மக்களை மோடி அரசு கைவிட்டு விட்டது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல், ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்க கூட்டுத் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கைகளையும், பிரதமா் மோடியையும் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து விமா்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.