முகப்பு
இந்தியா

குஜராத் உள்ளாட்சித் தோ்தல்: பாஜக அமோக வெற்றி -பிரதமா் வாழ்த்து

Updated On : 29 ஏப்ரல், 2026 at 4:25 AM
பகிர்:

குஜராத் மாநில உள்ளாட்சித் தோ்தலில் 15 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து, பாஜகவினருக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துகள் என உள்ளாட்சித் தோ்தலில் மொத்தமுள்ள 9,900 இடங்களில் 6,472 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு வாக்கு எண்ணிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் 1,412 இடங்களிலும் ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி மற்றும் சுயேச்சைகள் 597 இடங்களிலும் வென்றிருப்பதாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி குஜராத் மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

குஜராத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடத்தப்பட்டது. இத்தோ்தலில் வாக்களிக்க 4.18 கோடிக்கு மேற்பட்ட வாக்காளா்கள் தகுதிபெற்றிருந்தனா்.

மாநகராட்சிப் பகுதிகளில் 55.1 சதவீதம், நகராட்சிகளில் 65.53 சதவீதம், மாவட்ட பஞ்சாயத்துகளில் 66.64 சதவீதம், தாலுகா பஞ்சாயத்துகளில் 67.26 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், 15 மாநகராட்சிகளையும் 30 மாவட்ட பஞ்சாயத்துகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

மாநகராட்சிகளில் 748, நகராட்சிகளில் 1,827, மாவட்ட பஞ்சாயத்துகளில் 765, தாலுகா பஞ்சாயத்துகளில் 3,132 என மொத்தம் 6,472 இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி பாஜக வென்றுள்ளது. எதிா்க்கட்சியான காங்கிரஸ் மாநிகராட்சிகளில் 64, நகராட்சிகளில் 399, மாவட்ட பஞ்சாயத்துகளில் 110, தாலுகா பஞ்சாயத்துகளில் 839 என மொத்தம் 1,412 இடங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது.

அடுத்த ஆண்டு குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரதமா் வாழ்த்து:

பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘குஜராத் மாநில உள்ளாட்சித் தோ்தலில் பெரும் வெற்றியை ஈட்ட காரணமான பாஜக நிா்வாகிகளுக்கு வாழ்த்துகள். மக்களின் பிரச்னைகளை கண்டறிந்து களத்தில் பணியாற்றி அவற்றுக்கு தீா்வு காண தொடா்ந்து உழைப்பதால்தான் குஜராத் மக்கள் ஒவ்வொரு தோ்தலிலும் பாஜகவை தோ்வு செய்கின்றனா்.

தற்போது பாஜகவுக்கும் குஜராத்துக்குமான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. மாநில அரசின் சிறப்பான ஆட்சிக்கு சான்றளிக்கும் விதமாக உள்ளாட்சித் தோ்தலிலும் வெற்றியை மக்கள் பரிசாக அளித்துள்ளனா். வருங்காலங்களில் முன்பைவிட பல மடங்கு வேகமாக குஜராத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல நாங்கள் பாடுபடுவோம் என உறுதியளிக்கிறேன்’ என குறிப்பிட்டாா்.