கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
கேரளத்தில் சமீபமாக பாம்புக் கடி சம்பவங்கள் அதிகரிப்பு குறித்து...
கேரளத்தில் சமீபகாலமாக பாம்புக் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரளத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைகளால் சூழப்பட்டிருப்பதுடன், அப்பகுதிகளில் பாம்புகளும் அதிகம் காணப்படும். இந்த நிலையில், கேரளத்தில் அதிகரித்த கோடை வெப்பத்தின் காரணமாக, பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் 54 பேர் பாம்புக் கடிக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, திங்கள்கிழமை (ஏப். 27) ஒருநாள் மட்டுமே 16 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.
Advertisement
அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்களையடுத்து, மாநிலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களிலும் பாம்புக் கடிக்கான எதிர்ப்பு மருந்துகளை தயாராக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாம்புக் கடி பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகவும் மாநில சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இதனிடையே, பாம்புக் கடி சம்பவங்கள் தொடர்பாக மாநிலத்தில் உள்ள இன்ஃப்ளூன்சர்கள் நகைச்சுவையாக ரீல்ஸ்களும் பதிவிட்டு வருகின்றனர்.