மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து பாஜக கருத்து...
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்து மாநிலங்களிலும் தாமரை மலரும் என்பதை வெளிப்படுத்தியிருப்பதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. வருகின்ற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன.
இதனிடையே நேற்று மாலை வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றப் போவதாகவும், அஸ்ஸாமில் பாஜகவும், புதுவையில் தே.ஜ. கூட்டணியும் ஆட்சியில் தொடரப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடரும் என சில கணிப்புகளும், அதிமுக கைப்பற்றும் என சில கணிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய ஷெசாத் பூனாவாலா தெரிவித்ததாவது:
“மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் ஒவ்வொரு தேர்தலில் வன்முறை நிகழ்வது வழக்கமாக இருந்தது. முந்தைய தேர்தல்களின் போது வன்முறைகளால் பொதுமக்கள் பலர் பலியாகியிருக்கின்றனர்.
ஆனால், இந்த முறை பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றன. வன்முறை சம்பவங்கள் மிகக் குறைவாகவே நிகழ்ந்துள்ளன. இதற்கு தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய பாதுகாப்புத் துறைக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தாமரை மலர்வதை வெளிப்படுத்தி இருக்கிறது. அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக ஆட்சியில் தொடரப் போகிறோம். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான எங்கள் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறது. புதுவையில் மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறோம். மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி” எனத் தெரிவித்தார்.