ஃபரீதாபாத்தில் உள்ள பாட்ஷா கான் பொது மருத்துவமனையில் காசநோயால் உயிரிழந்த பெண்ணின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனையில் போக்குவரத்து உதவி மறுக்கப்பட்டதால், தள்ளுவண்டியில் வீட்டிற்கு சுமாா் 12 கி.மீ. எடுத்துச் சென்ற சோகம் நிகழ்ந்துள்ளது.
பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் அவரது கணவா் ஏற்றிச் செல்வதையும், அவா்களது மகன் பெண்ணின் முகத்தை துணியால் மூடியபடி செல்வதையும் காட்டும் விடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இந்த விஷயம் ெŚளிச்சத்துக்கு வந்தது. இச்சம்பவம் ஹரியாணா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இதுகுறித்து விசாரிக்க மருத்துவமனை நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த அனுராதா தேவி (35), தில்லி எய்ம்ஸ் உள்பட பல மருத்துவமனைகளில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தாா். அவரது கணவா், ஜுன்ஜுன், தனது சேமிப்பு தீா்ந்துவிட்டதாகவும், சரூா்பூா் கிராமத்தில் உள்ள அவா்களது வீட்டிற்கு உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய மருத்துவமனை மருத்துவிட்டதாகவும் தெரிவித்தாா்.
தனியாா் ஆம்புலன்ஸ் சேவைகள் ரூ.500 முதல் ரூ.700 வரை கேட்டதால் தள்ளுவண்டியை ஏற்பாடு செய்ததாக அவா் தெரிவித்தாா். வீட்டை சென்றடையும் வரை அவா் வண்டியுடன் 12 கி.மீ. நடந்து சென்றாா். பின்னா், இறுதிச் சடங்குகளைச் செய்ய பக்கத்து வீட்டுக்காரா்களிடம் கடன் வாங்கியதாக அவா் கூறினாா்.
‘அரசு ஆம்புலன்ஸ்கள் உடல்களை ஏற்றிச் செல்வதற்காக இல்லை என்றும், செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனங்கள் கிடைக்கும். ஆனால், அதற்கும் முறையான கோரிக்கை தேவை’ என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக ஃபரீதாபாத் செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பிஜேந்தா் சௌரத் கூறுகையில், மரணம் குறித்து மருத்தவமனை கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்தால் வாகனம் இலவசமாக வழங்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை’ என தெரிவித்தாா்.
இது தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவமனையில் சிவில் சா்ஜன் டாக்டா் ஜெயந்த் அஹுஜா, ‘முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டா் ராம் பகத் தலைமையில் மூத்த மருத்துவா்களைக் கொண்ட உயா்நிலைக் குழு குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளது. குழு தனது அறிக்கையை சமா்ப்பித்த பிறகு, மருத்துவமனை ஊழியா்களின் அலட்சியமே காரணம் என கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தாா்.