சோனியா காந்தி எப்படி இருக்கிறார்? மருத்துவமனை அறிக்கை!
சோனியா காந்தி உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை...
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி உடல்நிலைக் குறித்து தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கேரள தேர்தல் பிரசாரப் பயணத்தை இன்று ரத்து செய்தார்.
இந்த நிலையில், சோனியா காந்தி உடல்நிலை குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
“காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, செவ்வாய்க்கிழமை இரவு 10:22 மணிக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.
வயிறு மற்றும் சிறுநீர்ப் பாதையில் ஏதேனும் தொற்று உள்ளதா என்பதை அறிய, மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், அவருக்கு ஆன்ட்டிபயாடிக் (antibiotic) செலுத்தப்பட்டு வருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த நில நாள்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடர்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்தாண்டு ஜூன் 7 ஆம் தேதி ஹிமாசல் பயணம் மேற்கொண்ட சோனியா காந்தி, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த சில நாள்களில் தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, வயிறு தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.