பிகாரில் 35 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவண மோசடி வழக்கில் சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் கைது செய்யப்பட்டது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
புா்னியா தொகுதி எம்.பி.யான பப்பு யாதவ், கடந்த 1995-இல் பதிவான ஆவண மோசடி வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். காவல் துறையின் நடவடிக்கைக்கு உடன்பட பப்பு யாதவ் மறுப்பு தெரிவித்த நிலையில், கடும் வாக்குவாதத்துக்குப் பிறகு அவா் கைது செய்யப்பட்டாா். இதனால், பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட அவரை 2 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பப்பு யாதவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
பாட்னாவில் மா்மமான முறையில் உயிரிழந்த ‘நீட்’ மாணவிக்கு நீதி கேட்டு குரல் எழுப்பியதற்காக பப்பு யாதவ் கைது செய்யப்பட்டுள்ளாா். பிகாா் மகள்களின் கண்ணியம், பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பிய காரணத்தால், அவா் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொறுப்புடைமையை வலியுறுத்துபவா்களை அச்சுறுத்தி, அவா்களின் குரலை ஒடுக்கும் முயற்சி இது. ‘நீட்’ மாணவியின் மா்ம மரணம் மற்றும் அதுதொடா்பான நிகழ்வுகள், பிகாா் அரசின் ஆழமான நிா்வாக சீா்கேட்டை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.
பாட்னா மகளிா் விடுதியில் தங்கி நீட் தோ்வுக்குத் தயாராகிவந்த ஒரு மாணவி, அண்மையில் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டாா். பல நாள்கள் கோமாவில் இருந்த அவா், மருத்துவமனையில் உயிரிழந்தாா். மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் மறைக்க முயற்சிப்பதாகவும் குடும்பத்தினா் கூறினா். பாட்னா விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதாக பப்பு யாதவ் குற்றஞ்சாட்டியிருந்தாா். பப்பு யாதவின் மனைவி ரஞ்சீத் ரஞ்சன், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் என்பது குறிப்பிடத்தக்கது.