பெண்களை 3 நாள்கள் தீண்டத்தகாதவராக நடத்த முடியாது: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம்
மாதத்தில் 3 நாள்கள் பெண்களை தீண்டத்தகாதவராக நடத்தக் கூடாது என்று சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
புது தில்லி: மாதத்தில் மூன்று நாள்கள் பெண்களை தீண்டத்தகாதவராக நடத்துவது, பிறகு நான்காவது நாளிலிருந்து அந்த நடைமுறையை கைவிடுவது கூடாது என சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது உள்பட மத வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இன்று விசாரணையைத் தொடங்கியது.
மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, கடந்த 2018ஆம் ஆண்டு சபரிமலை வழக்கில், 10 - 50 வயதுடைய பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 17-ன் கீழ் "தீண்டாமை" ஆகும் என்று தீர்ப்பளிக்கப்பட்டதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து நீதிபதி நாகரத்தினா இந்தக் கருத்துகளைக் கூறினார்.
Advertisement
Advertisement
சபரிமலை வழக்கில் சட்டப்பிரிவு 17-ஐப் பற்றி எவ்வாறு விவாதம் நடத்த முடியும் என்று தெரியவில்லை. ஒரு பெண்ணாக, இங்கு நான் கூறுவது ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் பெண்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவது, நான்காவது நாள் தீண்டத்தகாதவர் இல்லை எனக் கூறுவது முடியாது என்று கருத்தைப் பதிவு செய்தார்.
இதற்கு, பதிலளித்த மேத்தா, மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருப்பது போல, இந்தியா, அந்த அளவுக்கு ஆணாதிக்க நாடோ அல்லது பாலின பாகுபாட்டில் ஊறியிருக்கும் நாடோ அல்ல என்று குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணையின் பின்னணி? சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறுமிகள், மூதாட்டிகள் மட்டும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் பருவ பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 2018-ஆம் ஆண்டில் இதுதொடா்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, 4:1 என்ற பெரும்பான்மையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் வழிபாடு நடத்த அனுமதித்து தீா்ப்பளித்தது.
அதன் பிறகு 2019, நவம்பா் 14-ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, சபரிமலை ஐயப்பன் கோயில், மசூதிகள் மற்றும் பாா்ஸி மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு என வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டியது.
அப்போது ஒரு விவகாரத்தின் அடிப்படையில் மட்டுமே பல்வேறு மதங்களில் பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரான நடைமுறைகள் குறித்து முடிவுகளை மேற்கொள்ள முடியாது என 3:2 என்ற பெரும்பான்மையில் நீதிபதிகள் கூறினா். இதைத் தொடா்ந்து மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை 5 நீதிபதிகளுக்கும் மேற்பட்ட அரசியல் சாசன அமா்வு விசாரிக்க அவா்கள் பரிந்துரைத்தனா்.
இதையடுத்து, சபரிமலை விவகாரம் தொடா்பாக தனது மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணை மேற்கொண்ட 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, மீண்டும் அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு பரிந்துரைப்பதாக 2020, மே 11-ஆம் தேதி தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக ஏப்.7-ஆம் தேதி இறுதி விசாரணையை தொடங்குவதாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்.16-ஆம் தேதி தெரிவித்தது. ஏப்.22-ஆம் தேதியுடன் விசாரணை நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.