தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்
தேனிலவு கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
2025-ஆம் ஆண்டு தேனிலவின்போது தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஷில்லாங்கில் உள்ள விசாரணை நீதிமன்றம் ஒன்றில் சோனம் ரகுவன்ஷி சரணடைந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இவர், செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதாக கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விவேக் சியம் தெரிவித்தார்.
சோனமுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜூலை 23-ஆம் தேதி ஜாமீனை ரத்து செய்ததோடு, அவர் மூன்று வாரங்களுக்குள் சரணடையுமாறு உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
தேனிலவுக்கு மேகாலயம் அழைத்துச் சென்று, தொழிலதிபரான தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்த வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சோனம் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு மே 23 அன்று மேகாலயாவின் சோஹ்ரா (Sohra) பகுதியில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தபோது அந்தத் தம்பதியினர் காணாமல் போயினர். அதனைத் தொடர்ந்து, ஜூன் 2 அன்று ராஜாவுடைய உடல் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது.
தேனிலவின்போது ராஜாவைக் கொலை செய்ய சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் சதித்திட்டம் தீட்டி, கூலிப்படையினரை வைத்துக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை மேகாலய உயர் நீதிமன்றம் ஜூன் 29 அன்று உறுதி செய்தது.
விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி மாநில அரசு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜாமீனில் இருப்பது நடைபெற்று வரும் விசாரணையை பாதிக்கக்கூடும் என்று சோனமுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மேகாலய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.
அதுபோல, கொலை வழக்கு விசாரணை ஆறு மாதங்களுக்குள் நடைபெற்று முடிவடையாத பட்சத்தில், சோனம் புதிய ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய உரிமை உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.