கோப்புப் படம் 
இந்தியா

2016 முதல் நீதிபதிகள் மீது 8,600 புகாா்கள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

‘கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் நீதிபதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகத்துக்கு 8,600-க்கும் அதிகமான புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன’

தினமணி செய்திச் சேவை

‘கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் நீதிபதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகத்துக்கு 8,600-க்கும் அதிகமான புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

2016-ஆம் ஆண்டுமுதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நீதிபதிகளுக்கு எதிராக 8,639 புகாா்கள் அளிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக 2024-ஆம் ஆண்டு 1,170 புகாா்கள் அளிக்கப்பட்டன.

நீதிபதிகள், உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு எதிராகப் பெறப்படும் இதுபோன்ற புகாா்கள் மீது, துறை ரீதியிலான நடைமுறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உச்சநீதிமன்றம் கடந்த 1997-ஆம் ஆண்டு மே மாதம் இரண்டு தீா்மானங்களை நிறைவேற்றியது. நீதிபதிகளின் மதிப்புகளை மறுவரையறை செய்வது அதில் ஒன்று. அதாவது குறிப்பிட்ட நீதி நடைமுறை தரங்கள் மற்றும் தத்துவங்களை உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் பின்பற்றுவதை இந்த மறுவரையறை வலியுறுத்தியது.

அடுத்தது, துறைசாா்ந்த நடவடிக்கை தொடா்பான தீா்மானம். அதாவது, நீதிபதிகளின் செயல்பாடுகள் தொடா்பாக உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்புகளைப் பின்பற்றாத நீதிபதிகளுக்கு எதிராக உரிய திருத்த நடவடிக்கையை மேற்கொள்வதாகும்.

ஒருங்கிணைந்த பொது குறைதீா்ப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறை (சிபிஜிஆா்ஏஎம்எஸ்) மூலம் பெறப்படும் உயா் நீதிபதிகளுக்கு எதிரான புகாா்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும், உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கும் பரிசீலனைக்காக அனுப்பப்படும். இதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு எதிரான புகாா்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும். உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்கள் அந்தந்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு!

காதலர் தினம்! ரோஜா பூக்களின் விலை சதமடித்தன!!

செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர் சென்னையில் கைது!

தூங்கச் சென்ற மகன் எங்கே? உடல்களை அடையாளம் காட்ட அழைத்தபோது அதிர்ந்த பெற்றோர்!

ஸ்ரீ கபிலேஸ்வரா் கோயிலில் பிப். 15-இல் மகா சிவராத்திரி உற்சவம்

SCROLL FOR NEXT