புதிய பிரதமர் அலுவலகம், தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் உள்ளிட்டவை அடங்கிய "சேவா தீர்த்" வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
தலைநகர் தில்லியில் அரசுக் கட்டடங்களை மறுநிர்மாணம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டத்தின் பெயர் "சேவா தீர்த்" (சேவைத் தலம்) என்றும், கர்த்தவ்ய பவன் (மத்திய அரசின் தலைமைச் செயலகம்) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று பிரதமர் மோடியால் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
புதிய வளாகத்தில் தேவநகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட 'சேவா தீர்த்' என்ற பெயர்ப் பலகையும், அதன் கீழே 'நாக்ரிக் தேவோ பவ' (குடிமக்கள் கடவுளுக்கு நிகரானவர்) என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.
வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள அமைச்சரவை செயலகம் மற்றும் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் அலுவலகங்களை ஒன்றிணைத்து ரைசினியா மலையில் உள்ள தெற்குத் தொகுதியில் சேவா தீர்த் வளாகத்திற்குப் பிரதமர் அலுவலகம் மாற்றப்படும்.
இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால், பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்களுக்கு சேவை செய்வதை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பணியிடம் இதுவாகும். இங்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்படும். இந்தியாவின் பொது அமைப்புகள் மாற்றத்தைக் கண்டுவருகின்றன. ஆட்சி நிர்வாகத்தின் சிந்தனையானது "அதிகாரம்' என்பதில் இருந்து "சேவை' என்பதாக மாறி வருகிறது.
பிரதமர் அலுவலகத்துக்கான பெயர் மாற்றம் என்பது நிர்வாக ரீதியிலான மாற்றமாக மட்டுமின்றி கலாசார மற்றும் தார்மிக ரீதியிலானதாகவும் அமைகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி நிர்வாகப் பணியிடங்கள் கடமையையும், வெளிப்படைத் தன்மையையும் பிரதிபலிப்பதாக இது மாற்றப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு பெயரும், ஒவ்வொரு கட்டடமும், ஒவ்வோர் அடையாளமும் மக்களுக்கு சேவை செய்வதையே குறிப்பதாக இருக்கும்.
இந்திய பிரதமர் அலுவலகம் 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.