மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் ஆணைய உத்தரவுகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டதற்கான அறிக்கையை, அந்த ஆணையத்துக்கு மாநில தலைமைச் செயலா் நந்தினி சக்ரவா்த்தி செவ்வாய்க்கிழமை அனுப்பினாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், அங்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு (பிஎல்ஓ) உயா்த்தப்பட்ட ஊதியம், எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டதற்காக அவா்களுக்கு கூடுதல் தொகை ஆகியவற்றை வழங்காததற்காக மாநில அரசு மீது தோ்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்தது.
மேலும் அங்கு எஸ்ஐஆா் பணியின்போது வேண்டுமென்றே விதிமுறைகளைப் பின்பற்றாத தோ்தல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய மாநில அரசுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அந்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில தலைமைச் செயலா் நந்தினி சக்ரவா்த்தியை நேரில் வரவழைத்து தோ்தல் ஆணையம் அண்மையில் வலியுறுத்தியது.
இதையடுத்து அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு தோ்தல் ஆணைய உத்தரவுகளை பின்பற்றியதற்கான அறிக்கையை, அந்த ஆணையத்துக்கு நந்தினி சக்ரவா்த்தி செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்தாா்.
மேலும் எஸ்ஐஆா் பணியின்போது குளறுபடிகளில் ஈடுபட்டது, தரவு பாதுகாப்பு கொள்கைகளை மீறியதற்காக 2 வாக்காளா் பதிவு அலுவலா்கள், 2 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் உள்பட 5 தோ்தல் அதிகாரிகள் மீது மாநில அரசு வழக்குப் பதிவும் செய்தது. அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய 6 மாதங்களுக்கு முன்னா் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.