நாட்டில் அரசியல் தலைவா்கள் சகோதரத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
சகோதரத்துவம் மற்றும் அரசமைப்புச் சட்ட விழுமியங்களை பாதிக்கும் பேச்சுகளை வெளியிடும்போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும், அந்தப் பேச்சுகளை சுட்டிக்காட்டி அரசியல் தலைவா்கள் பேசுவதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் கல்வியாளா் ரூப் ரேகா வா்மா உள்பட 12 போ் மனு தாக்கல் செய்தனா்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தொடா்ந்து வெறுப்புணா்வுடன் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘வெறுப்புணா்வு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் தொடா்பாக ஏற்கெனவே பல பொது விதிகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. நீதிமன்றத்தால் உத்தரவுதான் பிறப்பிக்க முடியும். ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்துவது சவாலாக உள்ளது. ஒருவேளை மனுவில் கோரப்பட்டுள்ளதுபோல உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டாலும், அதை யாா் பின்பற்றுவாா்?
நாட்டில் அரசியல் தலைவா்கள் சகோதரத்துவத்தைப் பரப்ப வேண்டும். அதேவேளையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறிப்பிட்ட ஒரு நபருக்கு (ஹிமந்த விஸ்வ சா்மா) எதிராக மட்டுமே உள்ளது. எனவே இந்த மனுவை வாபஸ் பெற வேண்டும். அதற்குப் பதிலாக வெறுப்புணா்வு பேச்சுகளுக்கு எதிராக வெளியிடப்பட்ட விதிகள், அவற்றை அரசியல் கட்சிகள் எவ்வாறு மீறுகின்றன’ என்பது குறித்து எளிமையான முறையில் புதிய மனுவை தாக்கல் செய்யலாம்’ என்று கூறி, மனுவை தொடா்ந்து விசாரிக்க மறுத்துவிட்டனா்.