மகாராஷ்டிரத்தின் நாந்தேட் நகரில் 10 நாள் கைக்குழந்தையுடன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு அதிகாரிகள் சிறப்பு வசதியைச் செய்து கொடுத்தனர்.
ஷீதல் சந்திரகாந்த் சித்தே(21) பிறந்த குழந்தையுடன் அரசியல் அறிவியல் தேர்வு எழுதுவதற்காகத் தேர்வு மையத்திற்கு வந்தார். முன்னதாக பிரசவத்திற்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு பிப்ரவரி 10-ம் தேதி தனது சகோதரியுடன் ஆங்கிலத் தேர்வை எழுதினார்.
கல்வியின் மீதான அவரது உறுதியைப் பாராட்டி, தேர்வு அதிகாரிகள் ஷீதல் தேர்வெழுத வசதியாக அவருக்குத் தனி அறையும், குழந்தைக்கு ஏற்ப ஒரு தொட்டிலையும் ஏற்பாடு செய்தனர். குழந்தை ஓய்வெடுக்கும் நேரத்தில் தேர்வு எழுத அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஷீதலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமானது. அவர் ஸ்ரீ பஸ்வேஷ்வர் கல்லி மையத்தில் பயின்று வந்தார். தனது கணவர் பகலில் வேலைக்குச் செல்வதால் குழந்தையைப் பராமரிக்க வீட்டில் யாரும் இல்லை என்று அவர் கூறினார்.
12 ஆம் வகுப்புத் தேர்வு தனது எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது என்பதால், அதைத் தவறவிடாமல் இருப்பற்காக, கல்வியைத் தொடரும் தனது முடிவை அவரது குடும்பத்தினர் ஆதரித்ததாகவும் ஷீதல் கூறினார்.
தேர்வின்போது மாணவிக்குத் தனி அறை ஒதுக்கித் தேர்வெழுதும் நடவடிக்கையை மேற்கொண்டு கல்லூரியை நாந்தேட் கல்வி அதிகாரி மாதவ் சல்கர் பாராட்டினார்.
இனிமேல், நிர்வாகத்தின் சார்பாக அத்தகைய மாணவர்களை ஊக்குவிக்கத் தேர்வு மையங்களில் ஏற்பாடுகளைச் செய்வோம் என்று அவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறினார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.