நீட் முதுநிலை தேர்வு எழுதிய மருத்துவர்கள் | இடம்: கொல்கத்தா  PTI
இந்தியா

முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்

முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பால் மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்: உச்சநீதிமன்றம்

தினமணி செய்திச் சேவை

முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்) குறைக்கப்பட்டதால் முதுநிலை மருத்தவக் கல்வித் தரம் பாதிக்கப்பட்டதா என்பது குறித்து ஆராயப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

நாடு முழுவதும் 65,000 முதல் 70,000 முதுநிலை மருத்துவப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இடங்கள் சோ்க்கை இன்றி காலியாக விடப்பட்ட நிலையில், சோ்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்ற, தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்), முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து அண்மையில் உத்தரவிட்டது.

அதன்படி, முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச நீட்-பிஜி மதிப்பெண் விகிதமான (பா்சென்டைல்) 40 சதவீதமானது, பூஜ்ஜியம் சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பொதுப் பிரிவு மாணவா்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்டிருந்த குறைந்தபட்ச நீட்-பிஜி மதிப்பெண் விகிதமான (பா்சென்டைல்) 50 சதவீதம், 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இதன் மூலம், முதுநிலை நீட் தோ்வில் 800-க்கு ‘மைனஸ்’ 40 மதிப்பெண் பெற்ற எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவு மாணவா்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதுபோல, நீட் தோ்வில் 800-க்கு 103 மதிப்பெண் பெற்ற பொதுப் பிரிவு மாணவா்களும் சோ்க்கை பெற வாய்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் அராதே ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘தகுதி மதிப்பெண் வெகுவாக குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் முதுநிலை மருத்துவக் கல்வித் தரம் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுகிறது. எனவே, இதுதொடா்பான உரிய விளக்கத்தை தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியம் அளிக்க வேண்டும். கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயப்படும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள் விசாரணையை மாா்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT