மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!
மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் மறைவு பற்றி...
மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய் (வயது 71) திங்கள்கிழமை அதிகாலை காலமானார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இணை நிறுவனரான முகுல் ராய், கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்னை காரணமாக சிகிச்சையில் இருந்தார்.
சமீபத்தில் மூளை சம்பந்தப்பட்ட டிமென்ஷியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவர், கோமா நிலைக்குச் சென்றார்.
Advertisement
இந்த நிலையில், கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முகுல் ராயிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்ததாக அவரது மகன் சுப்ரான்ஷு ராய் தெரிவித்துள்ளார்.
முகுல் ராயின் அரசியல் வாழ்க்கை
மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் என்றழைக்கப்படும் முகுல் ராய், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்று பாரதிய ஜனதா கட்சிகளில் பணியாற்றியுள்ளார்.
1998 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்து திரிணமூல் காங்கிரஸை மமதா பானர்ஜி உருவாக்கியபோது, அவருடன் காங்கிரஸில் இருந்து வெளியாறினார்.
திரிணமூல் காங்கிரஸின் பொதுச் செயலாளராக பணியாற்றிய முகுல் ராய், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சராகவும், மத்திய ரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர், மமதா பானர்ஜியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2021-ல் பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகுல் ராய், பின்னர் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்ததால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தனது பதவியை இழந்தார்.
பின்னர் உடல்நிலைக் காரணமாக தீவிர அரசியலில் இருந்து முகுல் ராய் விலகினார்.