மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!
லக்னௌ வீரர் முகுல் சௌதரியின் கிரிக்கெட் பயணம் குறித்து...
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் முகுல் சௌதரியின் கிரிக்கெட் பயணம் பலரையும் வியக்கவைக்கதக்கதாக இருக்கிறது.
ஈடர்ன் கார்டன் திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது
இந்தப் போட்டியில் 16 ஓவர்களில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் ஆனதும் போட்டி முடிந்துவிட்டதென பலரும் நினைத்தார்கள். ஆனால், இளம் வீரர் முகுல் சௌதரி 27 பந்துகளில் 54 ரன்களை அடித்து நம்பமுடியாத இன்னிங்ஸை விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
Advertisement
முகுல் சௌதரியின் தந்தை தலிப் குமார் சௌதரி தான் பட்ட கஷ்டங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
நான் 2003ல் டிகிரி முடித்தேன். அந்த ஆண்டே திருமணம் நடந்தது. எனக்கு மகன் பிறக்க வேண்டுமென ஆசை. அதுவும் நடந்தது. அவனை கிரிக்கெட்டராக்க வேண்டுமென விரும்பினேன்.
முகுலை கிரிக்கெட் பயிற்சி பயிற்சியில் சேர்த்தபோதுதான் என்னிடம் போதுமான அளவுக்கு பணம் இல்லை எனப் புரிந்தது. அதனால், எனது வீட்டை விற்று, ரூ.21 லட்சம் பெற்றேன். அடுத்த ஆண்டு, ஒரு ஹோட்டலை தொடங்கி மற்றுமொரு கடனை வாங்கினேன். ஆனால், என்னால் எனது மாதத் தவணையைச் சரியான நேரத்தில் கட்ட முடியவில்லை. நான் சிறைக்குக்கூட சென்றிருக்கிறேன். ஆனால், எந்தத் தவறும் செய்யவில்லை.
எனது உறவினர்கள் என்னை கைவிட்டார்கள். அவர்களை என்னை பைத்தியக்காரன் எனக் கூறினார்கள். ‘நீ உனது வாழ்க்கை மட்டுமல்லாமல், உனது மகன் வாழ்க்கையையும் அழிக்கிறாய்’ என்றார்கள். தற்போது, நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என்பதை இந்த மோசமான வார்த்தைகள் எனக்கு மேலும் வலுவூட்டுவதாகவே இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.
முகுல் சௌதரி தோனி மாதிரி ஹெலிகாப்டர் ஷாட் அடித்ததும் ஆட்ட நாயகன் விருதை தந்தைக்கும் தோனிக்கும் சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.