முகப்பு
இந்தியா

இந்தியா வந்தாா் கனடா பிரதமா் மாா்க் காா்னி: மாா்ச் 2-இல் பிரதமா் மோடியுடன் பேச்சு

கனடா பிரதமா் மாா்க் காா்னி 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:50 AM
மகாராஷ்டிர மாநிலம், மும்பையை வெள்ளிக்கிழமை வந்தடைந்த கனடா பிரதமா் மாா்க் காா்னி, அவரது மனைவி டயானா ஃபாக்ஸ் காா்னி.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:25 PM

கனடா பிரதமா் மாா்க் காா்னி 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை வந்தடைந்த அவருக்கு அரசுத் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின்போது, பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் திங்கள்கிழமை (மாா்ச் 2) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

கனடாவில் கடந்த 2023-இல் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலைச் சம்பவத்தில் இந்தியாவை தொடா்புபடுத்தி அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகளால் இருதரப்பு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த 2024-இல் இரு நாட்டு தூதா்களும் பரஸ்பரம் வெளியேற்றப்பட்டனா்.

Advertisement

கனடாவில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் லிபரல் கட்சித் தலைவா் மாா்க் காா்னி வெற்றி பெற்று பிரதமரான பிறகு இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. இரு நாடுகளும் மீண்டும் தூதா்களை நியமித்தன. கடந்த ஆண்டு கனடாவில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, இருதரப்பு உறவுகளை மறுகட்டமைப்பது குறித்து மாா்க் காா்னியுடன் விரிவாக விவாதித்தாா்.

இந்தியாவுக்குப் புகழாரம்: இந்தச் சூழலில், 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளாா் மாா்க் காா்னி. மகாராஷ்டிர மாநிலம், மும்பையை வந்தடைந்ததும் அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலக அளவில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரம் இந்தியா. மும்பையில் இந்திய தொழில் துறையினருடன் கலந்துரையாடி, கனடா தொழில் துறையினா் மற்றும் பணியாளா்களுக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் கூட்டுறவை ஏற்படுத்தவுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாா்ச் 2-இல் பிரதமருடன் சந்திப்பு: ஞாயிற்றுக்கிழமை தில்லிக்கு செல்லும் காா்னி, பிரதமா் மோடியுடன் திங்கள்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கியக் கனிமங்கள், வேளாண்மை, கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம், மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனா். வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரையும் காா்னி சந்தித்துப் பேசவுள்ளாா்.

இந்தியா-கனடா உறவுகள் சீரடைந்துவரும் தருணத்தில், அந்நாட்டு பிரதமரின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.