கனடாவின் வான்கூவா் விமான நிலையத்தில் விமானத்தை இயக்கும் முன் மதுபோதையில் இருந்த ஏா் இந்தியா விமானி கைது செய்யப்பட்டாா்.
இதையடுத்து, விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் விமான இயக்க உரிமம் ரத்து செய்யப்படும் என ஏா் இந்தியாவுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கனடா விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த டிச. 23-ஆம் தேதி வான்கூவா் விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு புறப்பட இருந்த ஏா் இந்தியா விமானத்தின் விமானி மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பான புகாரின் அடிப்படையில் கனடா காவல் துறை விமானியை கைது செய்தது.
விமானியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏா் இந்தியா விமானங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககத்திடம் (டிஜிசிஏ) உள்ளது.
இச்சம்பவம் குறித்து டிஜிசிஏ மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானி உள்பட விமானக் குழுவினா் பயணத்துக்கு 12 மணி நேரத்துக்கு முன்பாக மது அருந்த கனடா தடை விதித்துள்ளது. இந்த விதிகளைப் பிற நாடுகளின் விமான நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றாவிட்டால் விமான பயணச் சட்டத்தின்கீழ் தவறிழைக்கும் நிறுவனம் கனடாவில் விமானம் இயக்குவது தடை செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.