ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார்: ஓவைசி நம்பிக்கை!
சோலப்பூர் பொதுக்கூட்டத்தில் ஓவைசி பேசியது...
ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என எஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஓவைசியின் கட்சியும் களமிறங்கியுள்ளது.
இந்தநிலையில், சோலப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஓவைசி பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் ஓவைசி பேசியதாவது,
இந்தியாவின் அரசியலமைப்பு சாசனம் அனைத்து சமூக மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குகிறது. ஆனால், பாகிஸ்தான் அரசியலமைப்பு சாசனம் நாட்டின் உயர் அரசியலமைப்புப் பதவிகளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்குகிறது.
ஆனால், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், எந்தவொரு குடிமகனும் பிரதமராகவோ, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவோ அல்லது மேயராகவோ ஆகலாம் என்று தெளிவாகக் கூறுகிறது.
இறைவனின் அருளால், அப்படி ஒரு நாள் கட்டாயம் வரும், அப்போது நானும் இருக்க மாட்டேன், இந்தத் தலைமுறையும் இருக்காது, ஆனால் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக ஒருநாள் வருவார். அந்த நாள் நிச்சயமாக வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று அவர் கூறினார்.