லடாக் போராட்டம்: ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு ஆதரவு தெரிவித்து லடாக்கில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் உருவபொம்மை வைக்கப்பட்ட சவப்பெட்டியுடன் அவர்களுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
ஈரானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், மக்களில் பொருளாதாரச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட செலவே அதிகரித்து காணப்படுவதால், ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை அந்நாட்டு அரசு களமிறக்கியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் ஒன்றுகூடி, ஈரான் அரசுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர்.
அப்போது, டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் உருவப் படம் இடம்பெற்ற சவப்பெட்டியை சாலையில் இழுத்துச் சென்று, இருவருக்கும் எதிராக முழக்கமிட்டனர்.
ஈரான் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாட்டின் தேசியக் கொடியையும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுத் தலைவர்களுக்கு எதிரான போராட்டத்தால் லடாக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.