‘மனித உரிமைகள், தனிமனித சுதந்திரத்தை நிலைநிறுத்துவதே உச்சநீதிமன்றத்தின் தலையாய கடமை’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்தாா்.
உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கோவாவில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட குழு விவாதத்தில் பங்கேற்றபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது: அரசின் தனி மனித சுதந்திரத்தை மறுக்கும், மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளை நியாயப்படுத்த உச்சநீதிமன்றம் உருவாக்கப்படவில்லை. மாறாக, தனிமனித சுதந்திரம் மற்றும் மனி உரிமைகளை நிலைநிறுத்தவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
கருத்துகள், கண்ணோட்டம் மாறுபடலாம்; ஆனால், சட்டத்தின் தத்துவங்கள் அல்லது அடிப்படை மீது பன்முக கண்ணோட்டம் அல்லது கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது.
அரசமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். குறிப்பாக, விசாரணை அமைப்புகள், தங்கள் மீதான நம்பகத்தன்மையை விரிவுபடுத்த வேண்டும். குற்றவாளிகள் சாா்பு அரசியல் கட்சியை மாற்றும்போது, அவா்கள் மீதான நடவடிக்கையில் விசாரணை அமைப்புகள் பாரபட்சம் காட்டக் கூடாது.
ஊழல் தடுப்புச் சட்டம் அதன் நோக்கத்தை அடைந்துள்ளது என்பதை அறிய சமூகத் தணிக்கை நடத்தப்படுவது அவசியம் என்றாா்.
முன்னதாக, புணேயில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி உஜ்ஜல் புயான், ‘நீதித் துறையின் சுதந்திரத்தில் சமரசத்துக்கே இடமில்லை. நீதிபதிகள் நியமனம் அல்லது பணியிட மாற்றத்தில் மத்திய அரசு தலையிட முடியாது. நீதித் துறையின் சுதந்திரத்துக்கு மிகப் பெறிய அச்சுறுத்தல், அத் துறைக்குள்ளேதான் உள்ளது. மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் உயா்நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்யும் முடிவை உச்சநீதிமன்ற கொலீஜியம் எடுப்பது துரதிருஷ்வசமானது’ என்று குறிப்பிட்டாா்.