அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது: முதல் குழுவினர் முகாம்களிலிருந்து புறப்பட்டனர்!
அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது தொடர்பாக...
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, இயற்கையாக உருவான பனிலிங்கம் கொண்ட குகைக் கோயிலுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை வெள்ளிக்கிழமை(ஜூலை 3) தொடங்கியது. இதற்காக பால்டால் மற்றும் நுன்வான்-பஹல்காம் ஆகிய இரு வழித்தட முகாம்களிலிருந்து யாத்ரீகர்களின் முதல் குழுவினர் தங்கள் பயணத்தைத் தொடங்கினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்வப்போது மழை பெய்த நிலையிலும், பாரம்பரியமான 48 கி.மீ தொலைவுள்ள நுன்வான்-பஹல்காம் பாதை மற்றும் 14 கி.மீ தொலைவுள்ள பால்டால் பாதை ஆகிய இரு வழிகளிலும் அதிகாலையிலேயே யாத்திரை தொடங்கியது என்று அதிகாரிகள் கூறினர்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள பஹல்காமில் உள்ள நுன்வான்-பஹல்காம் முகாம் மற்றும் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் பகுதியில் உள்ள பால்டால் முகாம் ஆகியவற்றிலிருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சாதுக்கள் அடங்கிய குழுவினர் விடியற்காலையிலேயே புறப்பட்டனர்.
Advertisement
Advertisement
அடிப்படை முகாம்களில் அந்தந்த மாவட்ட துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கொடியசைத்து யாத்திரையைத் தொடங்கி வைத்தபோது, 'பம் பம் போலே' என்ற முழக்கங்கள் காற்றில் எதிரொலித்தன.
முன்னதாக வியாழக்கிழமை, ஜம்முவின் பகவதி நகரில் உள்ள யாத்திரை அடிப்படை முகாமிலிருந்து 4,809-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழுவை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கை மதிய வேளையில் சென்றடைந்த யாத்ரீகர்களுக்கு நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
இயற்கையாக உருவான பனிலிங்கம் அமைந்துள்ள அந்தக் குகைக் கோயிலில் அவர்கள் வழிபாடு செய்வார்கள்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 3) முதல் ஆகஸ்ட் 28 வரை 57 நாள்களுக்கு யாத்திரை நடைபெறவுள்ளது. யாத்திரை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, இரு வழித்தடங்களிலும் காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் பிற துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யாத்திரையையொட்டி, ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் பக்தா்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 28 வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The annual Amarnath Yatra began on Friday as the first batches of pilgrims left the twin base camps in Baltal and Nunwan to start their journey to the 3,880-metre-high cave shrine in the south Kashmir Himalayas that houses a naturally formed ice lingam...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.