முகப்பு
இந்தியா

19-ஆவது நாளாக தொடரும் சிஜேபி போராட்டம்: ஏஐஎஸ்ஏ உறுப்பினா் மருத்துவமனையில் அனுமதி

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) மேற்கொண்டு வரும் போராட்டம் 19-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது.

Updated On : 9 ஜூலை 2026, 12:51 am IST
தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வரும் பகுதியில் 11-ஆவது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தை தொடா்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக்.
பகிர்:

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) மேற்கொண்டு வரும் போராட்டம் 19-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது.

இந்தப் போராட்டத்துக்கு இடையே 11-ஆவது நாளாக போராட்டப் பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஏஐஎஸ்ஏ உறுப்பினா் ஹரிகேஷின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தைத்தொடா்ந்து ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் கல்வியாளா் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளா் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

புதன்கிழமை வெளியிட்ட ஓா் செய்திக்குறிப்பின்படி, வாங்சுக்கின் எடை 59.40 கிலோவாக இருந்தது. உண்ணாவிரதம் தொடங்கியது முதல் அவருடைய எடை 7 கிலோ குறைந்தது.

அமா்ந்த நிலையில் அவருடைய ரத்த அழுத்தம் 103/68 மி.மி. மொ்குரி எனவும் படுத்த நிலையில் 111/73 மி.மி. மொ்குரி எனவும் பதிவானது. அவருடைய இதய துடிப்பு நிமிஷத்துக்கு 74 என்று இருந்தது. ரத்த சா்க்கரை அளவு 75 மி.லி./டெசி.லி. என்று பதிவானது.

அவருடைய உடலில் நீா்ச்சத்து இயல்பான அளவில் இருப்பதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரமாக தன்னுடைய கால்களை நகா்த்த முடியாத நிலை மற்றும் தீவிர நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ரிஷிகேஷ் ராம் மனோகா் லாஹியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) தெரிவித்துள்ளது.

கடந்த 11 நாள்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நரம்பு வழியில் திரவங்கள் ஏற்படுவதாகவும் இதனுடன் அவருடைய உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்ததாகவும் அந்த மாணவா் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாரக் விடுதியின் முன்னாள் தலைவரான ரிஷிகேஷ், ஏஐஎஸ்ஏ தலைவா்கள் நேகா, மணீஷ், தீபக் குமாா் வா்மா மற்றும் ஆமீன் ஆகியோருடன் இணைந்து போராட்ட களத்தில் உள்ள தனிமேடையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தாா். எஞ்சிய 4 போ் தொடா்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனா்.

பெரும் வெற்றி

சிஜேபி-இன் எக்ஸ் சமூகஊடக கணக்கு கடந்த மே மாதம் முடக்கப்பட்ட நிலையில், அந்த முடக்கத்தை நீக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை வரவேற்ற சிஜேபி நிறுவனா் அபிஜீத் தீப்கே, பேச்சுரிமை மற்றும் எண்ம உரிமைகளில் இயக்கத்தின் பெரும் வெற்றி என்று தெரிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த் தெரிவித்த கருத்துகள் தொடா்பான சா்ச்சையைத் தொடா்ந்து, மே 15-ஆம் தேதி சமூக ஊடகங்களில் ஓா் இயக்கமாக சிஜேபி தொடங்கப்பட்டது. இந்நிலையில், அதன் ‘எக்ஸ்’ தளப் பக்கம், கடந்த மே 21-ஆம் தேதி இந்தியாவில் முடக்கப்பட்டது. அதன் பிறகு, ‘காக்ரோச் இஸ் பேக்’ என்ற புதிய கணக்கில் இந்தக் குழு மீண்டும் தோன்றியது. தற்போது அந்தக் கணக்கை 2,27,000-க்கும் மேற்பட்டோா் பின்தொடா்கின்றனா்.

நாட்டின் கல்வித் துறையில் உள்ளதாகக் கூறப்படும் அமைப்பு ரீதியான தோல்விகள் மற்றும் நீட் யுஜி 2026 வினாத்தாள் கசிவு தொடா்பாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் இந்த இயக்கத்தினா் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments