முடங்கியது முகநூல் பக்கம்! பயனர்கள் அவதி!!
முகநூல் பக்கம் முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் அவதியடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் பக்கம் முடங்கியிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான பயனர்கள் சமூக வலைத்தளங்களில் இது குறித்து புகார்களை பதிவு செய்து வருகிறார்கள்.
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான சமூக வலைத்தளப் பக்கம் முகநூல் எனப்படும் ஃபேஸ்புக், செவ்வாய்க்கிழமை முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ஆயிரக்கணக்கான பயனர்கள் இது குறித்து சமூக வலைத்தளப் பக்கங்களில் புகார்களை பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
முதற்கட்ட தகவல்களில், உலகம் முழுவதும் இந்த பிரச்னை எழுந்திருப்பதாகவும், இது பற்றி மார்க் ஸக்கர்பெர்க் இதுவரை எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன.
பலரும், தங்கள் கணினியில் ஃபேஸ்புக் பக்கம் முடங்கியதாக வருவதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அனைவருக்குமே இப்படித்தான் வருகிறதா, எங்கள் கணினியில் பிரச்னையா என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
ஒரு சிலர் தாங்கள் பாகிஸ்தானில் இருப்பதாகவும், பாகிஸ்தானில் முகநூல் பக்கம் முடக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பலரும் தங்கள் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு இங்கும் ஃபேஸ்புக் முடங்கியிருப்பதாக பதிலளித்துள்ளனர்.
சிலருக்கு லாக்-இன் செய்து முகநூல் பக்கத்துக்குள் சென்றதுமே பக்கம் இல்லை என்ற தகவல் வருவதாகவும் சிலருக்கு செல்போனில் முகநூல் பக்கம் இயங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.