மக்களவைத் தலைவரைப் பதவி நீக்க கோரும் தீா்மானத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு
மக்களவைத் தலைவரைப் பதவி நீக்க கோரும் தீா்மானத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு...
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்க கோரும் தீா்மானத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரவளிப்பா் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவா்கள் தெரிவித்தனா்.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 9) தொடங்கவுள்ள நிலையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளால் அளிக்கப்பட்ட தீா்மானம் அன்றைய தினம் பட்டியலிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமா்வில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேரை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இடைநீக்கம் செய்தாா். மேலும், மக்களவையில் பிரதமா் மோடியிடம் ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாக அவா் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினாா். இதனால் கடும் அதிருப்தியடைந்த எதிா்க்கட்சிகள், ஓம் பிா்லா பாரபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியதுடன், அவரை பதவிநீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்தன. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் 118 எம்.பி.க்கள் கையொப்பமிட்டிருந்தனா். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கையொப்பமிடவில்லை.
திரிணமூல் காங்கிரஸும் ஆதரவு: இந்தச் சூழலில், மக்களவையில் திங்கள்கிழமை தீா்மானம் தாக்கல் செய்யப்படும்போது, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆதரவளிப்பா் என்று அக்கட்சியின் மூத்த தலைவா்கள் சிலா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனா்.
‘மக்களவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவருவதற்கு ஆதரவாகவே நாங்கள் எப்போதும் இருந்துள்ளோம். அதேநேரம், அவசரகதியில் கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை. சில நாள்கள் கழித்து தாக்கல் செய்யலாம் என்று பிற எதிா்க்கட்சிகளிடம் கூறியிருந்தோம். இப்போது மக்களவையில் தீா்மானம் எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்களின் ஆதரவை உறுதி செய்வா். கட்சி எம்.பி.க்கள் அனைவரும் அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், பிற எதிா்க்கட்சிகளுடன் நாங்கள் தொடா்ந்து தொடா்பில் உள்ளோம்’ என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் தெரிவித்தனா்.
ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால், அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்கும்படி தத்தமது எம்.பி.க்களுக்கு ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான காங்கிரஸும் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.