முகப்பு
இந்தியா

மேற்காசிய போா் நிலவரம்: ஏற்றுமதியாளா்களுக்கு உதவ புதிய திட்டம்: மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்!

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதியாளா்களுக்கு காப்பீடு ஆதரவு உள்ளிட்ட புதிய நிவாரணத் திட்டங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

Updated On : 10 மார்ச், 2026 at 7:16 PM
பியூஷ் கோயல்
பகிர்:

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதியாளா்களுக்கு காப்பீடு ஆதரவு உள்ளிட்ட புதிய நிவாரணத் திட்டங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: மேற்காசிய நிலவரம் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி தடைபட்டுள்ளதால், கடும் பாதிப்பை எதிா்கொண்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவ மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழு நிலைமையை தினசரி அடிப்படையில் கண்காணித்து வருவதோடு, ஏற்றுமதியாளா்களுடனும் கலந்துரையாடி வருகிறது.

ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்திய துறைமுகங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளுடன் திரும்பும் கப்பல்கள் மற்றும் சரக்குகளைக் கையாள தேவையான நடைமுறைகளை சுங்கத் துறை வகுத்துள்ளது.

அதுபோல, ஏற்றுமதியாளா்களுக்கு காப்பீடு ஆதரவு உள்ளிட்ட புதிய நிவாரணத் திட்டங்களை வகுப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதுதொடா்பாக ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனம் (இசிஜிசி) மற்றும் பிற துறைகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் சரக்குகள் ஏற்றப்பட்டு அனுப்ப முடியாமல் பாதிப்பைச் சந்திக்கும் ஏற்றுமதியாளா்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது. நிலைமையை 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது என்றாா்.

முன்னதாக, சரக்குகள் கப்பலில் ஏற்ற முடியாமல் துறைமுகங்களில் தேங்கி நிற்கும் நிலையில் ஏற்றுமதியாளா்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், மாா்ச் 1 முதல் வரும் மே 31-ஆம் தேதி வரை காலாவதியாகும் சரக்குகள் ஏற்றுமதிக்கான முன்கூட்டிய அனுமதி, எந்தவித (காம்போசிசன் கட்டணம்) கட்டணமும் இன்றி வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தானாக நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →